Sunday, July 8, 2007

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா தாஜ்மஹால்! 2

அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, கிரேக்கத்தின் ஆக்ரோபாலிஸ் என்றழைக்கப்படும் 2500 ஆண்டுக்கால பழமை வாய்ந்த பார்த்தீனன் கோயில், சீனத்தின் பெருஞ்சுவர், ரோமில் உள்ள மாபெரும் விளையாட்டுத் திடல், மெக்சிகோவில் உள்ள ஹிட்சா பிரமீட், எகிப்தில் உள்ள கெய்சா பிரமீடுகள், இந்தியாவின் தாஜ்மஹால் ஆகியன முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிசயங்கள் என்று கூறத்தக்க அளவிற்கு உலகெங்கிலும் உள்ள பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள், மாடமாளிகைகள், அழகு தோட்டங்கள், அற்புத ஓவியங்கள் என்று ஏராளமாக இருக்கின்றன. அவைகளின் அளவும், கட்டப்பட்ட நேர்த்தியும், அந்த கட்டுமானங்களோடு தொடர்புடைய வரலாறும், அது கட்டப்பட்டதில் உள்ள சூட்சமும் நிச்சயம் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளன. அந்த வகையில் சீனத்தின் பெருஞ்சுவரும், பாபிலோனின் தொங்கு தோட்டமும், எகிப்தின் பிரமீடுகளும், கிரேக்கத்தின் ஆக்ரோபாலிசும் சிறப்பு மிக்கவைதான். ஆயினும், இவை யாவற்றிலும் அரசு, ஆதிக்கம், பிரமாண்டம், கட்டடக்கலை, வரலாற்றுச் சிறப்பு ஆகியன இருந்தாலும் இந்தியாவின் தாஜ்மஹாலிற்கு உள்ள தனித்த, உயர்ந்த, இதயத்தின் ஆழத்திலும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் உன்னதத் தன்மையைப் பெற்றவை வேறெதுவும் இல்லை என்று துணிந்து கூறலாம்.

ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த, மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம், ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருது மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஹாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.

கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால், வரலாற்றால் அறிந்தவர், காவியங்களில் உணர்ந்தவர்கள் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.

இவ்வளவு அழகான தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட அரவிந்தர், "அழியாக் காதலின் அற்புதச் சின்னம்" என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.

வாக்குகளும், செல்வாக்கும், ஆதரவும், பற்றுதல்களும் பட்டியல்களை நிர்ணயிக்கலாம். ஆனால் அவற்றில் இடம்பெற்றாலும், இடம்பெறாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் தாஜ்மஹால் என்றென்றைக்கும் ஆழம் காணமுடியாத அதிசயமாக நிலைத்திருக்கும்.

No comments: