Thursday, November 15, 2007

ரீட்யூன் ஆகும் தமிழ்த்தாய் வாழ்த்து!


உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரீட்யூன் செய்து புதிய வடிவில் மாற்றவுள்ளார்.

நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் 30 வருடங்களுக்கு முன்பு பாடலாக மலர்ந்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கத் தொடங்கி இன்றளவும், பள்ளிகள் தோறும், அரசு விழாக்கள் தோறும் மறவாமல் தமிழ் அன்னையில் புகழ் பாடி வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதலுடன் இந்தப் பாடலின் மெட்டை மாற்றியமைக்க இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விரும்புகிறாராம். தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தால் ஏப்ரல் மாதம் இந்தப் பணியில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாராம்.

ரஹ்மானுக்கு இந்த யோசனையக் கொடுத்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா. சமீபத்தில் சென்னையில் நடந்த கல்லூரிப் பாடல் வெளியீட்டு விழாவின்போது இந்த கோரிக்கையை வைத்தார் பாலு. அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய மற்றவர்களும் இதை வழிமொழிந்தனராம்.

பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரத்திற்குப் புது இசை வடிவம் கொடுத்தவர் ரஹ்மான். இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் ரஹ்மானின் வந்தே மாதரம் தொட்டுத் தாலாட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு முன்பு மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு புது இசை உருவம் கொடுக்க ரஹ்மான் முனைந்துள்ளார்.

பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான்!

No comments: