
நல்ல கதையும், சிறந்த திரைக் கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல சினிமாவைக் கொடுக்க முடியும். தொழில்நுட்பம் எல்லாம் அடுத்தபட்சம்தான் என்று இளம் படைப்பாளிகளுக்கு இயக்குநர் மணிரத்னம் அறிவுரை கூறியுள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் 38வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் அங்கு பேசுகையில், கதையை நன்றாக சொல்ல வேண்டும். திறமையான கலைஞர்களை அதற்குத் தேர்வு செய்வது அவசியம். நல்ல கதையும், சிறந்த கலைஞர்களும், நல்ல திரைக்கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல படமாக கொடுக்க முடியும்.
சரியான கலைஞர்கள் இல்லாமல், நல்ல கதையைக் கொடுத்தால் அது நிச்சயம் வெற்றி பெற முடியாது. கலைஞர்களை விட கதைதான் முக்கியம்.
திரைப்படம் தொடர்பாக இன்னும் கூட நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். எனது படங்களின் முடிவுகள் மென்மையானதாகவே இருக்கும்.
கீதாஞ்சலி, தில்சே ஆகிய படங்களில் நல்ல கதை இருந்தும், முடிவு மென்மையானதாக இல்லாததால், அவை வெற்றி பெற முடியவில்லை.
ஒரு படத்தின் முடிவுதான் மக்கள் மனதில் கடைசியாக நிற்கும். எனவே இரண்டு மணி நேரம் கதையைச் சொல்லிய பிறகு அதை லாஜிக்குடன் முடிக்கவும் வேண்டும் என்றார் மணி.
நாலு வார்த்தை சொன்னாலும் நச்சென்று சொல்லியுள்ளார் மணி.

No comments:
Post a Comment