Sunday, November 18, 2007

கோவிலுக்குள் கதை சொன்னேன்! -இளையராஜாவும், ஒரு இயக்குனரும்!


தமிழில் டைட்டில் வைக்கிறேன் பேர்வழி என்று எதையெதையோ வைக்கிற இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல தமிழில் பெயர் வைத்திருக்கிறார் கே.சந்தர்நாத். கண்களும் கவி பாடுதே! இதுதான் இவர் இயக்கி வரும் படத்தின் பெயர். சுமார் 30 படங்களுக்கு மேல் பி.வாசுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சந்தர்நாத்துக்கு இந்தப்படத்தின் கதை மேல் இருக்கிற நம்பிக்கைக்கு இணையாக இசைஞானி இளையராஜாவின் இசைமேல் நம்பிக்கை இருக்கிறது.

இளையராஜாவுடன் மூகாம்பிகை கோவிலுக்கு போயிருந்தோம். அங்கே பிரகாரத்தில் அமர்ந்திருக்கும்போது கதையை சொல்ல சொன்னார் ராஜா. நான் எந்த கதையை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவருடன் போயிருந்தேனோ, அந்த நேரத்தில் அந்த கதையை சொல்லாமல் என்னையறியாமல் வேறு கதையை சொல்ல ஆரம்பித்தது என் மனம்.

அந்த கதையைதான் இப்போது படமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்றார் சந்தர். காரைக்காலை சுற்றிதான் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள். உலகம் முழுக்க சுற்றுவதெல்லாம் வேஸ்ட். உங்களுக்கு என்ன மாதிரி லொகேஷன் வேண்டுமென்றாலும், அது காரைக்காலில் இருக்கிறது என்கிறார். மூன்று ஹீரோக்களையும், மூன்று ஹீரோயின்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் சந்தர். எல்லாம் புதுசாக இருந்தாலும், ராஜா இசை இருக்கிறதே... அது எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கும் என்கிறார் நம்பிக்கையுடன்.

கட்டுமான தொழில் செய்பவர்கள்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள். கலவையை சரியாத்தான் போட்டிருக்காங்க!