Thursday, November 15, 2007

வறுமை-குடி: மேக்கப்மேன் தற்கொலை

வீட்டில் வறுமை தலைவிரித்தாடியதாலும், குடிப்பழக்கத்தாலும் சினிமா மேக்கப்மேன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கே.கே.நகர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் காந்தி நகரில் வசித்து வந்தவர் முருகன் (32). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

முருகன், உதவி மேக்கப்மேனாக பணியாற்றி வந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் போட்டுள்ளார். கடந்த 10 வருடமாக மேக்கப் மேனாக இருந்த இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது தசாவதாரம், நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார்.

திரை நட்சத்திரங்களை அழகுபடுத்தி ஜொலிக்க வைத்த இவரின் வாழ்க்கை மட்டும் மங்கலாகவே இருந்தது. போதிய வருமானம் இல்லாததால் வீட்டில் எப்போதும் வறுமை தாண்டவமாடியது. இதில் குடிப்பழக்கமும் அவருடன் சேர்ந்து கொண்டது.

தினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். இதனால் முருகனுக்கும், தேன்மொழிக்கும் தினசரி சண்டை நடக்குமாம். வழக்கம் போல நேற்று முன்தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் மனைவிக்கும் சண்டை மூண்டுள்ளது. விரக்தியிலும், கோபத்திலும் கணவரை கடுமையாக திட்டி விட்டார் தேன்மொழி.

பின்னர் டியூஷனுக்குப் போயிருந்த மகனை கூட்டி வருவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்த அவர், தனது கணவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறித் துடித்தார்.

முருகனின் தற்கொலையால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியது. கணவரைப் பறிகொடுத்த தேன்மொழி தனது இரு குழந்தைகளையும் கட்டிக் கொண்டு கதறி அழுதது அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

முருகனின் தற்கொலைக்கு வறுமைதான் முக்கிய காரணம் என மேக்கப் மேன் சங்க தலைவர் ராஜு கூறியுள்ளார். சினிமாவில் மேக்கப் ேமனாக இருப்பவர்களுக்கு தினசரி ரூ. 225 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்றார் ராஜு. முருகன் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூ. 45 ஆயிரம் குடும்ப நல நிதியாக தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: