
முன்னாள் பாலிவுட் கனவு தேவதை மாதுரி தீக்ஷித் நீண்ட காலத்திற்குப் பிறகு நடித்து இன்று வெளியாகும் ஆஜா நாச்லே படத்தின் முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் புக் செய்து விட்டாராம் மாதுரியின் தீவிர ரசிகரான பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேன்.
சில காலத்திற்கு முன்பு வரை பாலிவுட் ரசிகர்களை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தவர் மாதுரி தீக்ஷித். இவரது ஆட்டத்திற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உலகெங்கும் இருந்தனர். மாதுரியின் ஹம் ஆப் கே ஹெய்ன் கோன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும்.
சில வருடங்களுக்கு முன்பு மாதுரி கல்யாணம் செய்து கொண்டு கணவருடன், அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவருக்கு அழகான ஒரு பையனும் இருக்கிறான்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாதுரி. ஆஜா நாச்லே என்ற படத்தில் மாதுரி திறமை காட்டியுள்ளார். இப்படத்திற்கு மாதுரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சற்றும் தனது ஸ்டைல் குறையாமல் இப்படத்தில் நடித்துள்ளாராம் மாதுரி.
ஆஜா நாச்லே இந்தியா மற்றும் உலகெங்கிலும் இன்று ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் மாதுரியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆஜா நாச்லேயை மற்ற ரசிகர்களை விட ஒரு படி மேலே போய் படு ஆரவாரமாக வரவேற்கக் காத்துள்ளார்.
மாதுரியின் தீவிர ரசிகரான ஹூசேன், ஹம் ஆப்கே .. படத்தை 50க்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசித்தவர். வெறித்தனமான ரசிகரான ஹூசேன், மாதுரியை வைத்து ஏகப்பட்ட ஓவியங்களையும் தீட்டியுள்ளார். அவரை வைத்து கஜ காமினி என்ற படத்தையும் தயாரித்தார்.
இந்த நிலையில் ஆஜா நாச்லே படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள ஹூசேன், துபாயில் இன்று வெளியாகும் இப்படத்தை, தானும், தனது முக்கிய நண்பர்களும் மட்டும் பார்ப்பதற்காக முதல் காட்சிக்கா அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி விட்டாராம்.
தானும் மாதுரியும் இருக்கும் படத்தை வைத்து அழைப்பிதழையும் அடித்துள்ள ஹூசேன், அதை தனக்கு நெருக்கமான 193 பேருக்க மட்டும் கொடுத்து படம் பார்க்க வருமாறு அழைத்துள்ளாராம்.
இதைக் கேள்விப்பட்ட மாதுரி சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறாராம். எவ்வளவு பெரிய மனிதர் ஹூசேன், அவர் எனது படத்தின் டிக்கெட்டுக்களை வாங்கியிருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறாராம் மாதுரி.

No comments:
Post a Comment