Monday, November 12, 2007

க்ளைமாக்ஸ் ஜுரம்! -ரயில்வே கொடுத்த கசப்பு மருந்து!

'ரயில் நிலையத்தில் க்ளைமாக்ஸ் வைத்தால் அந்த படம் பெரிய வெற்றி பெரும்' இப்படி போகிற போக்கில் ஊதிவிட்டு போகிற சில புண்ணியவான்களின் கருணையால் ரயில்வே துறைக்கு அமோக விளைச்சல்!

பதினாறு வயதினிலே தொடங்கி, இதயம் உள்ளிட்ட பல்வேறு படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக காட்டியதால், ஹீரோவோ, ஹீரோயினோ வலுக்கட்டாயமாக ரயில்வே ஸ்டேஷனில் பிரிந்து, பின் அபாயசங்கலியின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஒன்று சேர்வார்கள்! ஊருக்கு போகிற ஹீரோயின் பஸ்சில் ஏறி போனால் என்ன என்று எந்த ரசிகனும் இயக்குனர்களை கேட்டதாக வரலாறே இல்லை. அதுமட்டுமல்ல... இந்த ரயில் போய்விட்டால் அவ்வளவுதான். வாழ்க்கையே போச்சு என்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு போகிற ஹீரோக்கள், அடுத்த ரயில் பிடித்து ஹீரோயின் வீட்டுக்கு போனால் என்ன என்றும் யோசித்தது இல்லை. போகட்டும் விடுங்கள்...

ரயில் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளில் எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இனிமேல் ரயிலின் கூரை மேல் சண்டை போடுவது, படியில் அமர்ந்து கொண்டு பயணம் செய்வது போலவோ, படிகளில் தொங்கிக் கொண்டு செல்வது போலவோ காட்சிகள் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போதே படத்தின் கதை சுருக்கத்தையும் காட்சி விளக்கத்தையும் கொடுக்க வேண்டுமாம். (கதை சுருக்கமா? அதை தயாரிப்பாளர்களுக்கே காட்டுவதில்லையே பல இயக்குனர்கள்?) இப்படி பல கெடுபிடிகளை விதித்திருக்கும் ரயில்வே துறை, சென்னை போன்ற பெரு நகர ரயில்வே நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.

பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் ஓ.கே! சின்ன தயாரிப்பாளர்கள் இனிமேல் நல்ல பஸ் நிறுத்தமாக பார்த்து க்ளைமாக்சை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!

No comments: