
தமிழில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சிம்ரன், கருணாஸுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
முதல் இன்னிங்ஸில் வெளுத்துக் கட்டியவர் சிம்ரன். ஆனால் கல்யாணமாகி, குழந்தையும் பெற்று திரும்பி வந்த அவர் 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
பலமாக முயன்றும் கூட அவருக்குப் படம் கொடுக்க ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும் முன்வரவில்லை. அவருடன் முன்பு ஜோடி போட்டு நடித்த ஹீரோக்கள் இப்போது திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம்.
இதனால் அப்செட் ஆன சிம்ரன் மலையாளத்தில் நடிக்க முயன்றார். அதன் விளைவாக ஒரு படமும் கிடைத்தது. ஆனால் அதில் அவரை எய்ட்ஸ் நோயாளியாக சித்தரித்து படம் எடுத்தனர். இது படம் வெளியான பிறகுதான் சிம்ரனுக்கே தெரிந்ததாம். கடுப்பாகிப் போன சிம்ரன் இனி மலையாளத்தில் நடிப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.
இடையில் கலைஞர் டிவியில் புகுந்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், சிம்ரனைத் தேடி தமிழில் ஒரு படம் வந்துள்ளதாம். மலையாளத்தில் முன்பு சீனிவாசன், பார்வதி நடிப்பில் வெளியான வடக்கு நோக்கி யந்த்ரம் படத்தின் ரீமேக்கில் சிம்ரன் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடி போடப் போவது யார் தெரியுமா? கருணாஸ்!
சுமாரான அழகுடன் உள்ள ஒரு ஆண், அழகான பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு அவர் படும் பாடு, சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதையாம்.
இந்தப் படமாவது சிம்ரனுக்கு 'லிப்ட்' கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment