Thursday, November 29, 2007

கண்ணாவுக்கு பிரகாஷ்ராஜ் செக்!


பத்து நிமிடத்தில் கதை சொல்லுங்க என்றார் பிரகாஷ்ராஜ். நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே இந்த படத்திலே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் சம்மதம் கொடுத்த அந்த நேரம், நான் கதை சொல்ல ஆரம்பித்த ஒன்பதாவது நிமிடம்! இப்படி ஹீரோ ஒருவருக்கு கதை சொன்ன விஷயத்தையே ஒரு பில்டப்போடு சொல்ல தெரிந்த கண்ணா படத்தின் இயக்குனர் ஆனந்துக்கு, பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டை வாங்கி படத்தை விரைவில் முடிப்பது மட்டும் அவ்வளவு எளிதாக இல்லை. பயங்கர ஜவ்வ்வ்வ்வு!

கண்ணா படம் துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு நாள், ஒரு நாள் என்று பிரகாஷ்ராஜிடம் கால்ஷீட் வாங்கிதான் படத்தை முடித்திருக்கிறார் ஆனந்த். டப்பிங் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். இங்கேதான் பிரச்சனையே ஆரம்பம் ஆகியிருக்கிறது. அபியும் நானும் என்ற சொந்த படத்தை எடுத்து வருகிறார் பிரகாஷ். அதில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். கண்ணாவில் ஷீலாவுக்கு அப்பாவாம். இரண்டு கதைகளின் மையக்கருத்தும் கிட்டதட்ட ஒன்றாகவே இருப்பதால், கண்ணா படத்தின் கதையை மாற்றி சில காட்சிகள் எடுங்கள். அப்படி செய்தால்தான் டப்பிங் பேசுவேன் என்கிறாராம் பிரகாஷ்.

விஷயத்தை இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் பேசிக் கொண்டிருக்கின்றன. விரைவில் சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஆனந்த்.

No comments: