Tuesday, December 11, 2007

குஷ்பு தொடங்கும் பட விழா


சென்னையில் வருகிற 14ம் தேதி தொடங்கும் 5வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகை குஷ்பு தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5வது திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்குகிறது.

குஷ்பு விழாவைத் தொடங்கி வைக்கிறார். இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதல் நாளன்று ஆஸ்கர் விருது பெற்ற ஜெர்மனிப் படமான தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ் திரையிடப்படுகிறது.

14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 42 நாடுகளைச் சேர்ந்த 124 படங்கள் திரையிடப்படவுள்ளன. கோவாவில் சமீபத்தில் முடிந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான படங்கள் இந்த விழாவிலும் கலந்து கொள்கின்றன.

திரைப்பட வர்த்தக சபை அரங்கம், உட்லண்ட்ஸ், பைலட் ஆகிய மூன்று திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழில் பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், பருத்தி வீரன், அம்முவாகிய நான், எவனோ ஒருவன், மொழி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

காங்கோ, நைஜீரியா, எகிப்து, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் பல்வேறு படங்கள் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

இயக்குநர் கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், சத்யராஜ், மணிரத்தினம்,
சுஹாசினி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.

விழாவின் நிறைவு நாளில் அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுகள் என்ற படம் திரையிடப்படுகிறது.

No comments: