skip to main |
skip to sidebar
சென்னையில் வருகிற 14ம் தேதி தொடங்கும் 5வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகை குஷ்பு தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5வது திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்குகிறது.
குஷ்பு விழாவைத் தொடங்கி வைக்கிறார். இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதல் நாளன்று ஆஸ்கர் விருது பெற்ற ஜெர்மனிப் படமான தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ் திரையிடப்படுகிறது.
14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 42 நாடுகளைச் சேர்ந்த 124 படங்கள் திரையிடப்படவுள்ளன. கோவாவில் சமீபத்தில் முடிந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான படங்கள் இந்த விழாவிலும் கலந்து கொள்கின்றன.
திரைப்பட வர்த்தக சபை அரங்கம், உட்லண்ட்ஸ், பைலட் ஆகிய மூன்று திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழில் பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், பருத்தி வீரன், அம்முவாகிய நான், எவனோ ஒருவன், மொழி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
காங்கோ, நைஜீரியா, எகிப்து, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் பல்வேறு படங்கள் திரையிடப்படும் எனத் தெரிகிறது.
இயக்குநர் கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், சத்யராஜ், மணிரத்தினம்,
சுஹாசினி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.
விழாவின் நிறைவு நாளில் அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுகள் என்ற படம் திரையிடப்படுகிறது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிஸ்கோ ஆடியபோது, ஒரு பெண் என்ஜீனியர் தனது காலை மிதித்து விட்டதால், கோபமடைந்த துணை நடிகை ஒருவர் அந்த பெண் என்ஜீனியருடன் குடுமி பிடி சண்டை போட்டார். இதுதொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் நடைபெறும் பேயாட்ட நடனங்கள், காவல்துறைக்கு பெரும் தலை இடியாக மாறி வருகிறது.
இந்த நடனங்களில் ஆபாசம் அளவுக்கு அதிமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இது போதாதென்று, அவ்வப்போது பிரபல பெண்கள் அதிகமாக குடித்து விட்டு சண்டை போடுவதும் அதிகரித்து வருகிறது.
இதற்காகவே இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கிளப்கள், உல்லாச ஓய்வு விடுதிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், துணை நடிகை ஒருவருக்கும், பெண் என்ஜீனியர் ஒருவருக்கும் இடையே கடும் கட்டிப்பிடி சண்டை நடந்துள்ளது.
இந்த ஹோட்டலில் உள்ள பாரில் மது அருந்தி விட்டு பலரும் ஜோடி ஜோடியாக தங்களை மறந்த நிலையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் பிரபல துணை நடிகையும் ஒருவர். இவர் அடிக்கடி இதுபோன்ற ஆட்டங்களில் கலாட்டா செய்வதில் பிரபலமானவர்.
உல்லாச பானத்தை உள்ளே இறக்கி விட்டு, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார் துணை நடிகை. அவருக்கு அருகே கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஒருவர் தனது துணையுடன் ஆடிக் கொண்டிருந்தார். இருவருமே நல்ல மப்பில் இருந்துள்ளனர்.
அப்போது பெண் என்ஜீனியரின் கால், துணை நடிகையின் காலில் தெரியாமல் பட்டு விட்டது. அவ்வளவுதான் உக்கிரதாண்டவத்தை ஆரம்பித்து விட்டார் அந்த துணை நடிகை.
பெண் என்ஜீனியரின் தலை முடியைப் பிடித்து இழுத்து ஆவேசமாக சண்டை போட்டார். பதிலுக்கு அந்தப் பெண்ணும், துணை நடிகையின் தலை முடியைப் பிடித்து ஆய்ந்து விட்டார். இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.
போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் சண்டையைப் பார்த்ததும் மப்பு போய் விட்டது. மிரண்டு போய் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உள்ளே பாய்ந்து இரு பெண்களையும் பிரித்து விட்டனர்.
சண்டை அத்துடன் முடிந்தது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் சண்டையை முடித்து விட்டு வெளியே வந்த இருவரும் கார் பார்க்கிங் பகுதியில் மறுபடியும் கட்டி உருள ஆரம்பித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இருவரது புகார்களையும் வாங்கிக் கொண்ட போலீஸார், இருவருக்கும் போதை தெளியும் வரை காத்திருந்தனர்.
போதை தெளிந்த நிலையில் தாங்கள் சண்டை போட்டது தவறுதான், இனிமேல் இதுபோல நடக்காது என்று இருவரும் போலீஸில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் எச்சரித்த போலீஸார் இப்போது போங்கள், ஆனால் புகார் அப்படியேதான் இருக்கும். வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் சமாதானமாகப் போவதாக மீண்டும் தெரிவித்தால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிப்போம் என்று கூறி இரு பெண்களையும் அனுப்பி வைத்தனர்.

வடிவேலு 2வது முறையாக நாயகனாக நடித்துள்ள படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். சூப்பரான 3 கெட்டப்களில் வடிவேலு கலக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் ரஜினி, கமலைத் தவிர கிட்டத்தட்ட கோலிவுட்டின் முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விஜய், சூர்யா, சிம்பு ஆகியோர்தான் நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக இருந்தனர். சேரன், பார்த்திபனும் வந்திருந்து சிறப்பித்தனர்.
படு வித்தியாசமாக, லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த கண் பார்வையாற்ற, காது கேட்காத சிறுவர், சிறுமியர் முன்னிலையில் ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது டச்சிங்காக இருந்தது. ரஜினிக்குப் பிறகு சிறார் வட்டாரத்தின் ஆதரவு வடிவேலுவுக்குத்தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல இது இருந்தது.
வடிவேலு, விஜய், சூர்யா, சிம்பு என தமிழ்த் திரையுலகின் தூண்களுக்கு மத்தியில் இருந்ததை அந்தக் குட்டிப் பட்டாளம் படு குஷியாகவே அனுபவித்தது.
விஜய்யின் பெயர் நிகழ்ச்சி அழைப்பிதழில் இல்லை. திடீரெனத்தான் அவர் வந்தார். வடிவேலுவுக்கு இதில் பரம சந்தோஷம். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேட்டுக் கொண்டதன் பேரில் விஜய் வந்தாராம்.
அதேபோல அதே தியேட்டர் வளாகத்தில் நடந்த பிரிவோம் சந்திப்போம் பட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்து விட்டு சேரனும், வடிவேலு நிகழ்ச்சிக்கு வந்து வடிவேலுவை வாயார வாழ்த்தி விட்டுப் போனார்.
விழாவில் சூர்யா ஆடியோவை வெளியிட சிம்பு பெற்றுக் கொண்டார்.
பேசியவர்களிலேயே முக்கியமான பேச்சு சிம்புவுடையதுதான். வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தி விட்டுப் போனார் சிம்பு.
சிம்பு பேசுகையில், இப்போதைய இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு இடையே எந்தவித போட்டி மனப்பான்மையும் இல்லை, நட்போடுதான் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விழாவாக இது உள்ளது. இங்கு ஒரே மேடையில் விஜய் இருக்கிறார். கடவுள் மாதிரி வந்திருக்கிறார். சூர்யா இருக்கிறார், நான் இருக்கிறேன்.
வடிவேலுவின் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பவர் வடிவேலு. ஆனால் சிலர் இருக்கிறார்கள். சக நடிகர்களையே கிண்டல் செய்து காமெடி என்ற பெயரில் மனதைப் புண்படுத்துகிறார்கள். ஆனால் வடிவேலு அப்படி அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பார் வடிவேலு என்றார் சிம்பு.
சிம்பு யாரை வாரினார் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ரஜினி நடித்த சிவாஜியில் விவேக், பேசிய விரல் வித்தை பஞ்ச் டயலாக், சிம்புவை மனதில் வைத்துத்தான் வைக்கப்பட்டது என்பது சிம்பு தரப்பு ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத்தான் நேற்றைய விழாவில் கொட்டி விட்டுப் போனார் சிம்பு.
நிகழ்ச்சியின் நாயகனான வடிவேலு பேசுகையில், கொஞ்சம் உயரப் போனாலே பீதி வரும் என்பார்கள். எனக்கோ பயம்தான் வருகிறது. கை, கால் எல்லாம் அப்படியே உதறுகிறது. கரண்டு கம்பியைப் பிடித்து விட்டது போல இருக்குது.
தப்பு பண்ணிட்டமோ, வேண்டாத வேலையோன்னு தெரியுது. சிவனேன்னு காமெடியனா மட்டும் இருந்திருக்காலமோ என்று கூடத் தோன்றுகிறது.
முதலில் ஒரு கிணற்றில் தள்ளி விட்டார்கள். அதில் கொஞ்சம் தண்ணி இருந்தது. இப்போது பாழுங்கிணற்றில் தள்ளி விட்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் ஏறி வா என்று வேறு கூறுகிறார்கள்.
இம்சை அரசனில் உக்கிரபுத்திரன் கேரக்டரில் நான் சிரிக்கவே கூடாது என்றார்கள். இந்தப் படத்திலோ உங்களுக்கு நீங்கதான் வில்லன் என்று கூறினார்கள். கஷ்டப்பட்டு பேசி நடிச்சிருக்கேன். படத்தை நீங்கள்லாம் பார்த்து ரசிக்கும் வரை எனக்கு திக் திக்குன்னு இருக்கும் என்றார் வடிவேலு.
பார்த்திபன் வழக்கம் போல நகைச்சுவையால் அனைவரையும் நையப்புடைத்தார். அவர் கூறுகையில், வெளியூர் எங்காவது சென்றால் வடிவேலுவை கூப்பிட்டுட்டு வரலையா என்று கேட்கிறார்கள். ஏதோ அவர் என் பொண்டாட்டி போலவும், அல்லது நான் அவருக்குப் பொண்டாட்டி போலவும் நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல என்று அவர் கூறியபோது, அரங்கை கையலைகள் களேபரப்படுத்தின
தித்திக்கும் தீயாக தமிழ் சினிமாவைக் கலக்க ஆரம்பித்து, சரியான முறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என்று நினைத்த தியாவுக்கு கல்யாணமும் சதி செய்து விட்டதாம் - அதாவது கல்யாணம் ஆகாமலேயே அவருக்கும், அவருடைய காதலருக்கும் இடையிலான பந்தம் முறிந்து விட்டதாம்.
அழகுப் பெட்டகமாக தமிழ் சினிமாவுக்கு வந்த நாயகியரிடம் தியாவும் ஒருவர். நல்ல அழகு, வாளிப்பான கவர்ச்சி என எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்த தியாவுக்கு வாய்ப்புகள்தான் சரிவர வரவில்லை.
அங்கும் இங்குமாக ஓரிரு படங்களில் தலை காட்டி வந்தார். கோடம்பாக்கம் படத்தில் அமைதியான நடிப்பாலும், ஆபாசம் கலக்காத அழகாலும் கவர்ந்தார்.
அந்த சமயத்தில்தான் காதலிலும் விழுந்தார். கப்பல் கேப்டன் ஒருவருடன் காதல் கொண்ட தியா, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடத் தீர்மானித்தார்.
இதனால் புதிய வாய்ப்புகளை நிராகரித்த அவர் கையில் இருந்த ஓரிரு படங்களையும் வேகமாக முடித்துக் கொடுத்து விட்டு காதலருடன் கல்யாணத்திற்குத் தயாரானார்.
இந்த நிலையில்தான் காதலர் தரப்பிலிருந்து கல்யாணத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தியாவை மணக்க காதலரின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போதைக்கு அமைதி காப்போம், பிறகு சம்மதம் வாங்கி விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார் காதலர்.
இருந்தாலும் பிடிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் காதலர் கை நழுவிப் போய் விடுவாரோ என்று பயந்த தியா, காதலருடன் வீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்.
கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். இந்த நிமிடம் வரை காதலர் குடும்பத்திலிருந்து பச்சைக் கொடி வரவே இல்லையாம். இதற்கு மேலும் இருவரும் சேர்ந்து வசிப்பது சரியாக இருக்காது. பிரிந்து விடலாம் என்று காதலர் கூறி விட்டாராம்.
காதல் கல்யாணத்தில் முடியாமலேயே பிரிவு பட்டுப் போனதை எண்ணி பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் தியா.
வருத்தம் கரைந்து மீண்டும் அவர் நடிக்க வந்தாலும் வரலாம் என்று கோடம்பாக்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.