Thursday, December 20, 2007

PLEASE HELP..................................................................

தமிழ்மணத்தில் பதிவுகளை எவ்வாறு இனைப்பது என்று யாராவது எனக்கு தெளிவாகக் கூறுங்களேன் என்னுடைய மின்னஞ்சல்:khemkarpaka@yahoo.co.in please....

''ராமேஸ்வரம்''-சீமான் பாய்ச்சல்


என்று தாயகம் திரும்புவோம், எப்போது நமது துயரங்கள் தீரும் என்ற கவலையில் இருக்கும் இலங்கை அகதிகளை மோசமாக சித்தரிக்கும் வகையில் ராமேஸ்வரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் சீமான் கோபத்தை வெளியிட்டுள்ளார்.

புதுமுக இயக்குநர் செல்வம் இயக்க, ஜீவா, பாவனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராமேஸ்வரம். அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமின் பின்னணியில் நடிக்கும் காதல் கதை இது.

இதற்கு சீமான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை குறித்த முழுமையான விவரங்கள், உண்மைகள் நமக்கு தெரியாது. எனவே அந்த விவகாரத்தை திரைப்படமாக எடுக்க நினைப்பதையே தவிர்க்க வேண்டும். அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்களின் நிலையை இழிவுபடுத்தும் விதமாக, அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் படம் எடுப்பது தவறு.

இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபன், காதலிப்பது போல காட்டுவது சரியான செயலன்று. மீண்டும் எப்போது தாயகம் திரும்புவோம், பிரச்சினைகள் எப்போது தீரும் என்ற ஆதங்கத்தில், தவிப்பில் இருப்பவர்கள் காதலிப்பது போல காட்டினால் அது அவர்களை மோசமாக சித்தரிப்பது போலாகும் என்று கூறியிருந்தார் சீமான்.

இதற்கு செல்வம் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து செல்வம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் மீது தான் மட்டுமே பாசத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார் சீமான். அடுத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்ுத பாசம் காட்டினால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதனால்தான் எனது படம் குறித்து அவர் விமர்சித்துள்ளார். முதலில் எனது படத்தை அவர் பார்க்கட்டும், பிறகு பேசட்டும் என்று கூறியுள்ளார் செல்வம்.

செல்வம், சீமான் மீது பாய்ந்தாலும் கூட, ராமேஸ்வரம் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதையும், கதையின் போக்கு, கேரக்டர்கள் குறித்து ஆங்காங்கு சில அதிருப்திகளும் தலை தூக்கியிருப்பதை செல்வம் உணர வேண்டும். இது கூட சீமானின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

'அரவாணி' ஆகும் ஆச்சி


ஆச்சி மனோரமாவின் நீண்ட நாளைய ஆசை ஒரு வழியாக நிறைவேறப் போகிறது. புதிய படம் ஒன்றில் ஆச்சி, அரவாணி வேடத்தில் நடிக்கப் போகிறார்.

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா, நடிக்காத வேடங்களே இல்லை. அத்தனை வேடங்களிலும் நடித்துக் கலக்கியுள்ள மனோரமா மனதில், அரவாணி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அது கை கூடாமல் இருந்து வந்தது.

இப்போதுதான் அது நிறைவேற காலம் கனிந்துள்ளது. ஜான் என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் அரவாணி வேடத்தில் நடிக்கிறார் மனோரமா.

சோலைக்குயில், மலைச்சாரல், காதலே நிம்மதி ஆகிய படங்களை இயக்கிய இந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

நீலகிரி மலைப் பகுதியில் வாழும் படுகர் இனத்தவரின் வாழ்க்கைச் சூழலில், உருவாகும் படம் ஜான். ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தபோது படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.

மேலும் ஆச்சி மனோரமாவையும் அவர்கள் நடனமாடி வரவேற்றனர். உற்சாகத்தில் ஆச்சியும் அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆட்டத்தைப் போட்டு அசத்தினார்.

படத்தின் நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் ஆவர். ஆச்சியிடம் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி கதையையும் சொன்னபோது முழு திருப்தி அடைந்தாராம். மேலும், அரவாணி கேரக்டர் குறித்து கூறியதுமே திருப்தி அடைந்து நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

ஆச்சிக்கு, இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறார் இந்திரன்.

கல்லூரி கிளைமாக்ஸ் மாற்றம


கல்லூரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து மாற்றியுள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

இயக்குநர் ஷங்கரின் சிஷ்யரான பாலாஜி சக்திவேல் கொடுத்த முதல் படம் காதல். அந்த தாக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் கூட மீளாத நிலையில், அடுத்த படமான கல்லூரி வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கல்லூரிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், தர்மபுரியில் நடந்தது போல, மூன்று பெண்களை ஓடும் பேருந்தில் உயிருடன் கொளுத்துவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மீடியாக்கும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன. பாலாஜியும் யோசித்துப் பார்த்தார். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் அதுதொடர்பான கோர்ட் காட்சிகளும் தேவையில்லை என்று நினைத்தார் பாலாஜி.

இதையடுத்து கோர்ட் காட்சிகளை நீக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். மேலும், கிளைமாக்ஸ் காட்சியையும் கூட மாற்றியுள்ளார். புதிய மாற்றங்கள் கல்லூரிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாலாஜி.

கல்லூரியை திறந்து விட்ட கையோடு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தையும் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ்தான் தயாரிக்கவுள்ளது.

நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!


சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார்.

வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது.

அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த நாய் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மாநாட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கலாம் என திட்டமிட்டு நெல்லைக்குச் சென்றார்.

பின்னர் நெல்லையிலிருந்து சென்னைக்குத் திரும்பும்போது அந்த ஹோட்டலுக்குப் போய் நாயைப் பற்றி விசாரித்தார். அதற்கு ஹோட்டலில் இருந்தவர்கள், அந்த நாயை வேறு யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர்.

ஏமாற்றமடைந்த சந்திரசேகர், அந்த நாயின் பாசத்தை மறக்க முடியாமல் ஒலக்கூர் காவல் நிலையம் சென்று எப்படியாவது அந்த நாயை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

போலீஸாரும் சந்திரசேகரின் 'நாயுள்ளத்தைப்' பார்த்து வியந்து அந்த நாயைத் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நாயை வளர்த்து வருபவரிடம் பேசி அதைப் பெற்று சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர்.

சந்தோஷமடைந்த சந்திரசேகர், நாயுடன் சென்னைக்குத் திரும்பினார். அனாதரவாக திரிந்து கொண்டிருந்த அந்த திண்டிவனம் நாய் இப்போது சந்திரசேகரின் சென்னை வீட்டில் 'ஜம்'மென்று வளைய வந்து கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்


தமிழ் திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ படத்திற்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தமிழ்த் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு முதலில் டைட்டில்களுக்கு தான் திண்டாட்டம் இருந்தது. இதனால் பழைய படங்களின் டைட்டில்களையே மறுபடியும் சூட்ட ஆரம்பித்தனர்.

திருவிளையாடல், பொல்லாதவன் என பழைய ஹிட் படங்களின் தலைப்புகளை சூட்ட ஆரம்பித்தனர். பின்னர் ரீமிக்ஸ் பாடல்கள் வந்தன. லேட்டஸ்டாக பழைய படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

முதலில் நான் அவனில்லை அதே பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சமீபத்தில் பில்லாவை ரீமேக் செய்தனர்.

படங்களை ரீமேக் செய்வதை விட ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில்தான் திரையுலகினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

துள்ளுவதோ இளமை, ஆசை நூறு வகை, தொட்டால் பூ மலரும் என அந்தக் காலத்து ஹிட் பாடல்களை ரீமேக் செய்து அவை வெற்றி பெற்றதால் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற ஆரம்பித்தன.

அதிலும் மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலின் ரீமிக்ஸ் சூப்பர் ஹிட் ஆனதால் கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது..

தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள 8 திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம். பழைய சிவாஜி நடித்த பராசக்தி பட பாடல் முதல், பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் பாடல் வரை ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.

சுந்தர்.சியின் பெருமாள் படத்தில் பராசக்தியில் இடம்பெற்ற ஓ ரசிக சீமானே வா என்ற பாடலும், சுந்தர்.சியின் சண்ட படத்தில் அலைகள் ஓய்வதில்லையில் வந்த வாடி என் கப்பக்கிழங்கே என்ற பாட்டும் ரீமிக்ஸ் ஆகியுள்ளதாம்.

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற நலந்தானா பாடலும், சிங்கக்குட்டி என்ற படத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா....தேரோட்டமா... என்ற பாடலும்,

உனது விழியில் என்ற படத்தில் வல்லவனுக்கு வல்லவனில் வரும் பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடலும், அர்ஜூன் நடிக்கும் துரை படத்தில் பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தின் ராஜா..ராஜாதிராஜன் இந்த ராஜா... என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது.

சத்யராஜ் நடித்துள்ள தங்கம் படத்தில் நினைத்ததை முடிப்பவனில் வரும் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிம்புவின் கெட்டவன் படத்தில் அவர் தந்தை நடித்த மைதிலி என்னை காதலி படத்தில் வரும் ராக்கால வேளையிலே... என்ற பாடலை ரீமிக்ஸ் செய்கிறாராம்.

கற்பனை வளம் குன்றி விட்டதா அல்லது எதற்காக மூளையைக் கசக்கி கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.

பெண்களுக்காக ஸ்பெஷல் 'மிருகம்'!


பெண்கள் கூட்டம் அதிகம் வராததால், மிருகம் படத்தின் சிறப்புக் காட்சியை பெண்களுக்காக சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனராம்.

இயக்குநர் சாமி இயக்கத்தில், புதுமுகம் ஆதி, பத்மப்ரியா நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் மிருகம்.

பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்திற்கு பெண்களிடையே சரியான வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் பெண்கள் மிருகம் படத்திற்கு வராதது தயாரிப்பாளர் தரப்புக்கு சோர்வைக் கொடுத்துள்ளது.

இதையடுத்து பெண்களைக் கவருவதற்காக பெண்களுக்காகவே சிறப்பு இலவசக் காட்சிக்கு தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னை உதயம் தியேட்டரில் 22ம் தேதி பகல் 3 மணிக்கு இந்த இலவச சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பெண் துணைக்கு இன்னொரு பெண்ணை அழைத்து வரலாம். அவரும் இலவசமாகவே அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பெண்கள் காட்சியின்போது கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்.

வர மறுத்த அனுஷ்கா!


தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா.

சரண் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த வட்டாரம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகவிருந்தவர் அனுஷ்கா. ஆனால் கடைசி நேரத்தில் அனுஷ்காவை நிராகரித்தார் சரண்.

இதனால் வருத்தத்தில் இருந்த அனுஷ்காவுக்கு ஆதரவு தரும் வகையில் சுந்தர்.சியின் ரெண்டு படத்தில் நடிக்க அழைக்கப்பட்டார் அனுஷ்கா. இப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அப்படத்தில் ரீமா சென்தான் நாயகி. அனுஷ்கா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். இருந்தாலும் ரீமாவுக்கு சமமாக அனுஷ்காவும் பேசப்பட்டார்.

இப்படத்திற்குப் பின்னர் அனுஷ்கா தெலுங்குக்குப் போய் விட்டார். இப்போது தெலுங்கில் கை நிறைய வாய்ப்புகளுடன் பிசியாக உள்ளார் அனுஷ்கா.

இந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் கவனத்திற்கு என்ற புதுப் படத்தில் நாயகியாக நடிக்க அணுகினர். இப்படத்தின் நாயகன் ஜீவன்.

ஆனால் இப்படத்தை நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா. எனக்கு தமிழ் சரியான வாய்ப்புகள் தரவில்லை. அப்போது என்னை கை தூக்கி ஆதரவு கொடுத்தது தெலுங்குதான். தெலுங்கில் எனக்கு திருப்திகரமான அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே தெலுங்கிலேயே தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே வேறு படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அனுப்பி விட்டாராம்.

இதைக் கேட்டு அப்செட் ஆகி திரும்பி வந்துள்ளனராம் பயணிகள் கவனத்திற்கு படத் தரப்பினர்.

மறுபடியும் தமிழைத் தேடி அனுஷ்கா வர நேரிடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடுப்புடன் உள்ளனராம் தமிழ்த் திரையுலகினர்.